நிவாரண உதவித்திட்டம் - பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
நிவாரண உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத குடும்பங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ அல்லது பிரதேச செயலகங்களிடமோ மேன்முறையீடுகளை கையளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னர் வழங்கப்பட்ட மானியங்களை விட அதிகமாக வழங்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம்
மேலும், உண்மையான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, பொது மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் எனவும், குறைந்த வருமானம் பெறுவோரும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த மானியங்களை இழக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 23ஆம் திகதி ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், உண்மையான வறிய மக்கள் பெருமளவானோர் நிவாரணத் திட்டத்திலிருந்து வெளியேறியிருக்கலாம் என நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
