காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை மீண்டும் செயற்பாட்டில்...
வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை மீண்டும் புனரமைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கபட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக்கான சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்றதுடன் தற்காலிக நிர்வாக தெரிவும் நடைபெற்றது.
தற்காலிக நிர்வாகசபை தெரிவு
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 11பிரதேச செயலாளர் பிரிவிலிருந்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் சங்கத்தின் செயற்பாடுகளை வினைத்திறன்கொண்டதாகவும் சர்வதேசத்துடன் இணைந்ததாக கொண்டுசெல்லும் வகையில் இங்கு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.
அதற்காக தற்காலிக நிர்வாகசபை ஒன்றினை தெரிவுசெய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டபோது முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தலைவியாகயிருந்த திருமதி அ.அமலநாயகி மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.
மாவட்ட கிளையின் செயற்பாடு
செயலாளராக சுகந்தியும் பொருளாளராக பவானியும் தெரிவுசெய்யப்பட்டதுடன் 11 பிரதேச செயலக பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவியும் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்போது வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கபட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் செயற்பாடுகளை முன்கொண்டு சென்று ம்ட்டு. மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதியைப்பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
