அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்த, நலன்புரி கொடுப்பனவை பெறுவோர் மற்றும் பெறாதோரின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நலன்புரி நன்மைகளைப் பெறும் நபர்களின் பெயர் பட்டியலை வருடாந்தம் புதுப்பிப்பது கட்டாயம் என்பதால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கு தகுதியுடைய 29 இலட்சத்து 93 ஆயிரத்து 558 நபர்கள் ஏற்கனவே தமது தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
இந்தநிலையில், அவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் எனவே, கணக்கெடுப்பு உத்தியோகத்தர் வீட்டிற்கு வரும்போது, தேவையான ஆவணங்களைச் தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் தேசிய அடையாள அட்டைகள், கடந்த 3 மாதங்களுக்கான மின்சாரப் பட்டியல்கள், காணி உறுதிப்பத்திரங்கள், வாகன உரிமைப்பத்திரம் மற்றும் மருத்துவச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்கத் தயாராக வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |