பெரும்பான்மை இளைஞர்களால் தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞர்கள்!
பலாங்கொடை இராசகலை இல 01 பகுதியில் தமிழ் இளைஞர்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து ஏற்பட்ட மோதலால் அப்பகுதி தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சம்பவத்தினை தொடர்ந்து அந்தப் பிரதேச மக்கள் இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர் ரூபன் பெருமாளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அவர் அந்தத் தோட்டத்திற்குச் சென்று மக்களை சந்தித்துள்ளார்.
இரு தரப்பினரிடையே மோதல்

இந்தச் சம்பவமானது இராசகலை நகரை அண்மித்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதுடன், முதலில் தமிழ் இளைஞர்களே தாக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம் பெற்றதுடன், மூன்று தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
தாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் மற்றும் பெரும்பான்மையின இளைஞர்கள் பலாங்கொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, இச்சம்பத்துடன் தொடர்புடைய தமிழ் இளைஞர்களை மாத்திரம் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், இதுவரை எந்த ஒரு பெரும்பான்மை இனத்தவரும் கைது செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் ரூபன் பெருமாளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
முறைப்பாடு

அதே வேளை , இந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் நகரத்திற்குச் செல்ல முடியாதவாறு அச்சுறுத்தல்களும் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்

இந்தப் பிரதேச தமிழ் மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நகரை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் அந்த மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






