நெருக்கடியில் இருந்து மீள அவுஸ்திரேலிய உதவும்!! கோட்டாபயவிடம் வழங்கப்பட்ட உறுதிமொழி
இலங்கை அரசின் வருமானத்தை அதிகரிக்கவும் இயற்கை மின்சாரத்தை தயாரிக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியாக்கிக்கொள்ளவும் அவுஸ்திரேலிய உதவும் என கிளேயார் ஓ நேயில் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிளேர் ஓ நீல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர், இன்று (20) முற்பகல் கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.
சுங்க நிர்வாகத்தில் அனுபவத்தை வழங்குவதன் மூலம் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்யவும் அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிளேர் ஓ நீல் கூறினார்.
கடற்றொழில் ஒழுங்குபடுத்தல், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தவும், சர்வதேச மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கான மையமாக இலங்கையை மாற்றவும் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
ஆட்கடத்தலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆட்கடத்தலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பது அவுஸ்திரேலியாவின் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது. தற்போதைய புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொள்கையும் அதுவேயாகும் எனவும் கிளேர் ஓ நீல் தெரிவித்தார்.

