பரீட்சையில் ஆள்மாறாட்டம்! நீதிமன்றம் பிணை
சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பிணை
பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை கடந்த திங்கட்கிழமை(23) ஆரம்பித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதற்கமைய குறிப்பிட்ட பரீட்சைக்கு 21 வயது நபரொருவர் தனிப்பட்ட போலி பரீட்சார்த்தியாக தோற்றுவதற்கு அம்பாறை புறநகர் பகுதியில் இருந்து வருகை தந்துள்ளதுடன், சம்பவ தினமன்று இடம்பெற்ற சிங்கள மொழி மூலம் சமயபாட பரீட்சையை 32 வயதுடைய தனிப்பட்ட பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையை பாவித்து அவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து எழுதியுள்ளார்.
ஆள்மாறாட்ட சம்பவம்
அத்துடன் தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆள்மாறாட்டமானது கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
இதில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டு பெரியநீலாவணை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை(24) அன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த இருவருக்கு பிணை
இததையடுத்து, இன்று(27) வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களையும் பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
