பண மோகத்தால் அரச வங்கி காசாளருக்கு நேர்ந்த கதி
அரச வங்கிக் கிளை காசாளர் ஒருவர், தினசரி வட்டி சம்பாதிக்கும் முயற்சியில், வங்கியில் இருந்து ரூ.135 மில்லியனை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடுவெல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபரை ஒரு இளம் பெண் வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, வரவு வைக்கப்படும் செய்யப்பட்ட எந்தவொரு தொகைக்கும் 10% தினசரி வட்டி விகிதத்தைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.
சில மணி நேரங்களுக்குள் கிடைத்த வட்டி
அதனைதொடர்ந்து, சந்தேக நபர் ஆரம்பத்தில் அந்தப் பெண் வழங்கிய கணக்கிற்கு ரூ.30,000 ஐ மாற்றி சில மணி நேரங்களுக்குள் வட்டியுடன் ரூ.33,000 ஐப் பெற்றுள்ளார்.
இதனால் உற்சாகமடைந்த சந்தேக நபர், மறுநாள் (29) கடுவெல வங்கி கிளைக்கு கடமைக்காகச் சென்று, வங்கியில் இருந்து ரூ.135 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை ஒரே நாளில் அந்தப் பெண் கொடுத்த பல கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
இந்தக் கணக்குகளில் தனியார் மற்றும் அரசு வங்கிக் கணக்குகள் இரண்டும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவு
அதன்படி, சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் ரூ.3 மில்லியன் முதல் ரூ.20 மில்லியன் வரையிலான தொகையை குறித்த பெண்ணுக்கு வரவு வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபரான காசாளர் நீதிமன்றில் முற்படுத்தபட்டதையடுத்து அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
