நீதிபதிகள் பற்றாக்குறையால் முடங்கும் வழக்கு விசாரணைகள்..! அநுர மீது BASL குற்றச்சாட்டு
உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் ஜனாதிபதி, நாட்டின் அரசியலமைப்பை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ரஜீவ் அமரசூரிய இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான செயல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நீதித்துறை அமைப்பின் உயர் பதவிகளில் காலியிடங்கள் நிலவும் நிலையில், அவற்றை நிரப்ப முனையாமல் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் முயற்சிப்பது ஒரு சட்டவிரோதமான செயல் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “தற்போது உச்ச நீதிமன்றத்தில் 4 காலியிடங்களும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 காலியிடங்களும் என மொத்தம் 8 உயர் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

பொதுவாக இத்தகைய காலியிடம் ஏற்பட்ட உடனடியாக அதனை நிரப்புவதே வழக்கமாகும்.
ஆனால், சுமார் ஒரு வருட காலமாக நியமனங்கள் எதுவும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது தீவிரமான பிரச்சினையாகும்.
நீதிமன்ற நடவடிக்கைகள்
அரசியலமைப்பின் படி இந்த நியமனங்களைச் செய்வது ஜனாதிபதியின் கடமையாகும்.
ஆனால், அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு, மறுபுறம் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்த மசோதாக்களைக் கொண்டுவருவது நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிடும் செயலாகும்.

இந்த ஆபத்தான நிலைமை குறித்துக் கடந்த மார்ச் மாதம் நீதி அமைச்சருக்கும், மே மாதம் ஜனாதிபதியின் கவனத்திற்கும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் எழுத்துப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், இதுவரை அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக வழக்கு விசாரணைகள் தாமதமடைந்து, நீதிமன்ற நடவடிக்கைகள் மந்தகதியில் இயங்குவதால் இறுதியில் பொதுமக்களே கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |