மட்டக்களப்பில் தமிழ் தலைமைகளினால் இடையில் கைவிடப்பட்ட கரிநாள் போராட்டம்...!
இதுவரை இலங்கையில் உள்ள எந்த அரசிலும் நடைபெறாத அடக்குமுறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கரிநாள் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமலநாயகி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினக் கரிநாள் போராட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் தொடங்கிய இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டத்தை, வழமையாகப் போராட்டம் நடத்தும் மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை செல்ல விடாது, மட்டக்களப்பு நகரில் உள்ள வெள்ளைப்பாலத்திற்கு முன்னால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
காவல்துறையினரின் தடை
இந்தநிலையில், இன்று காலை 11 மணியளவில் கல்லடிப் பாலத்தில் ஆரம்பித்த போராட்டம், மட்டக்களப்பு நகரின் வெள்ளைப்பாலத்தின் முன்னால் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலையில், குறித்த போராட்டத்தை அந்த இடத்திலேயே நிறைவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற சுதந்திர தினக் கரிநாள் போராட்டங்களுக்குக் காவல்துறையினர் பல நீதிமன்றத் தடைகளைப் பெற்று, பல்வேறுபட்ட தடைகளை உருவாக்கிய நிலையில், காவல்துறையினரின் தடைகளை உடைத்துப் போராட்டத்தை முன்நகர்த்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தடைகள் உடைக்கப்பட்டுப் போராட்டத்தை வழிநடத்தியிருந்தனர்.
முறுகல் நிலை
இருப்பினும், இன்றைய போராட்டத்தைக் காவல்துறையினரின் கட்டளைக்கு இணங்க நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதால், போராட்டத்தை இடையிலேயே கைவிட வேண்டிய நிலை போராட்டக்காரர்களுக்கு உருவாகியது.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர், காவல்துறையினரின் தடையை உடைத்துக் காந்தி பூங்கா ஊடாகச் செல்ல வேண்டும் என கோஷம் எழுப்பியதோடு, காவல்துறையினரிடம் முரண்பட்டுக் காந்தி பூங்காவிற்குச் செல்ல முற்பட்ட போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை உருவாகியது.

இதனால் போராட்டத்தை மட்டக்களப்பு வெள்ளைப்பாலத்திற்கு முன்பாகவே நிறைவு செய்ததோடு, போராட்டத்தின் நிறைவில் கிழக்கு பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களினால் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினக் கரிநாள் போராட்டம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிழக்கு மாகாண சங்கத் தலைவிகளினால் சுதந்திர தினக் கரிநாள் போராட்டம் தொடர்பான கருத்துகளும் தெரிவிக்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |