குழந்தைகள் உட்பட 14 பேர் காவல்துறை விசாரணைக்குள் - மட்டக்களப்பில் சிக்கிய சந்தேக நபர்கள்!
மட்டக்களப்பிலிருந்து சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கைச் சேர்ந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடங்கலாக 14 பேர் நேற்று இரவு 11.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கொக்குவில் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட திராய்மடு பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற பிரதேசங்களிலிருந்து கடந்த 1 ஆம் திகதி, 9 ஆண்கள் 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 14 பேர் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில், 15 நாட்களின் பின் நேற்று இரவு கொக்குவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத பயணம்
இந்த விசாரணையின் போது, 14 பேரும் சுற்றுலா ஒன்றுக்காக மட்டக்களப்புக்கு சென்றதாகவும், வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்கான பொருட்கள் அவர்களது பைகளில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் சட்ட விரோதமான முறையில் வெளிநாடு ஒன்றுக்கு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.