மருந்து தட்டுப்பாட்டின் மத்தியிலும் மன்னாரில் சிறப்பாக செயற்பட்டு வரும் சிறுநீரக சிகிச்சை பிரிவு
இலங்கையில் அண்மைக்காலமாக சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகளினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
குறிப்பாக சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக சிதைவு, சிறுநீரக செயலிழப்பு உள்ளடங்களாக சிறுநீரகங்களுடன் தொடர்புபட்ட அதிகளவான நோய் காரணிகள் அதிகரித்துள்ளதுடன், இதன் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகளும் இவ்வாறான மரண அதிகரிப்புக்கு காரணங்களாக அமைக்கின்றது.
மனித உடலில் சிறுநீரகமானது சாதாரண நிலையில் 10 சென்றி மீற்றர் அளவை கொண்டிருக்கும் போது சிறுநீரகமானது தனது தொழிற்பாட்டை சாதாரணமாக மேற்கொள்ளும். இருப்பினும் உணவு பழக்கவழக்கம் அன்றாட நடவடிக்கைகள் நீரிழிவு, உயர் குருதி அமுக்கம் போன்ற நோய் காரணங்களால் சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பினால் அவ் சிறுநீரகங்கள் சிறிதாவதுடன் அதன் செயற்பாடுகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றது.
சிறுநீரக பாதிப்பு ஏற்படும் போது பொதுவாக உடலினால் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் செயற்பாடானது முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் வெளியேற வேண்டிய கழிவுகள் அனைத்தும் உடலினுல் சேகரிக்கப்பட்டு விடுகின்றது.
இவ்வாறு உடலினும் சேகரிக்கப்படும் கழிவுகள் இரத்ததிலும் உடலில் உள்ள பாகங்களிலும் நுரையீரல் உட்பட வயிற்றுபகுதியில் தேங்கும் போது உடல் வீக்கம், சோர்வு, மயக்கம், மூச்சுத்திணறல் உள்ளடங்களாக பல்வேறு நோய் அறிகுறிகள் தோற்றம் பெருவதுடன் சிலர் கழிவுகள் அதிகம் சேகரிக்கப்படிகின்றமையினால் மரணத்திற்கும் உள்ளாகின்றனர்.
இவ்வாறான நிலையில் சிறுநீரக மாற்றுச்சிகிச்சையே முழுமையான தீர்வாக காணப்படுகின்ற போதும், பொருத்தமான சிறுநீரகங்கள் கிடைப்பதென்பது அரிதிலும் அரிது.
குருதி சுத்திகரிப்பு முறை
சிறுநீரக நோயாளர்களை நோய்நிலமையில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த முறை அவர்களின் குருதியில் காணப்படும் கழிவுகளை அகற்றும் குருதி சுத்திகரிப்பு முறையாகும்.
இவ்வாறான சிறந்த குருதி சுத்திகரிப்பு முறையை ஐந்து வருடங்களாக சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றது மன்னார் குருதி சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவு.
வைத்தியர் சிசில் மற்றும் வைத்தியர் மல்ஷா கீழ் இயங்கும் மன்னார் குருதி சிகிச்சை பிரிவின் கீழ் தற்போது 60 சிறுநீரக நோயாளர்கள் சிறப்பான சிகிச்சையை பெற்று வருகின்றனர் என்பதுடன், சிறுநீரக பிரச்சினைகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக குறைந்துள்ளது.
மருந்து தட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் கடந்து உள்ளூர் மற்றும் வெளியூர் நோயாளர்களுக்கும் சிகிச்சை வழங்கும் விதமாக குறித்த சிகிச்சை பிரிவு ஐந்து வருடங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 2018 க்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் சிறுநீரக சிகிச்சை பிரிவு இன்மையால் பல சிறு நீரக நோயாளர்கள் தங்கள் சாதாரண சிகிச்சைக்காக கூட மன்னார் மாவட்டத்தில் இருந்து யாழ்பாணம், வவுனியா, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலையே காணப்பட்டது.
அதிலும் அவசர நோயாளர்கள் பலர் சிகிச்சை நிலையங்களுக்கு மன்னாரில் இருந்து அனுப்பப்படுவதற்கு முன்னே பல உபாதைகளுக்கும் உள்ளாகியிருந்த கசப்பான அனுபவங்களும் உண்டு.
இதை விட கடந்த 2017 ஆண்டும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுநீரக நோயாளி ஒருவர் இரத்த சுத்தீகரிப்புக்கு சிகிச்சைக்காக அனுராதபுரம் சென்று திரும்பிய நிலையில் பேருந்து தரிப்பிடத்திலேயே இறந்த சம்பவமும் மன்னாரில் பாதிவாகியிருந்தது.
சிகிச்சை பிரிவின் தோற்றுவாய்
இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் சிறுநீரக சிகைச்சை நிலையத்தின் முக்கியத்துவதின் அடிப்படையில் இரண்டு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடிய விதத்தில் அக்காலப்பகுதியில் வைத்தியசாலையில் காணப்பட்ட வளங்களை கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு சாதாரண இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது அப் பிரிவின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகஸ்தர்களின் அர்ப்பணிப்பின் காரணமாக 60 நோயாளர்களை பராமரிக்க கூடிய அளவில் சிறந்த சிகிச்சையை வழங்கி வருகின்றது.
மன்னார் சிறுநீரக குருதிமாற்று சிகிச்சை பிரிவு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய 140 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பயனடையும் வகையில் இந்த சிகிச்சை பிரிவு தனது சிகிச்சையின் தரத்தை அதிகரித்துள்ளது.
அதே நேரம் இச்சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சிறுநீரக நோய் காரணமாக மரணம் அடைவோரின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
வாரத்தில் ஏழு நாட்களும் இந்த பிரிவு சேவையாற்றுவதுடன் ஒரு சிறு நீரக நோயாளி கட்டாயம் கிழமைக்கு 2 அல்லது 3 முறை இவ் நிலையத்திற்கு வருகை தந்து இரத்த சுத்திகரிப்பில் ஈடுபடவேண்டிய அவசியம் உள்ளது.
சாதாரணமாக ஒரு நோயாளிக்கு இரத்த சுத்திகரிப்புக்கு நான்கு மணித்தியாளங்கள் தேவைப்படும் நிலையில் மாதத்திற்கு குறைந்தது 500 தடவைகள் சுத்திகரிப்பு செயற்பாடுகள் இவ் நிலையத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
இவை தவிர்ந்து பாம்பு கடி ,சலரோகம், சிறுநீர் கிருமி தொற்று போன்ற நோய் காரணமாக வைத்தியசாலை சிகிச்சைக்காக வருகை தரும் அவசர நோயாளர்களுக்குமான இரத்த சுத்திகரிப்பு சேவையையும் இவ் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.
சாதாரண அடிப்படை வசதிகள் இன்றி ஆரம்பிகப்பட்ட இந்தச் சிகிச்சை பிரிவு ஐந்து வருடங்களில் கிழமையில் 140 நபர்களுக்கும் நாள் ஒன்றுக்கு 20 நபர்களுக்கும் சிகிச்சை வழங்க கூடிய நிலையில் வளர்சியடைந்துள்ளது.
வெறுமனே மன்னார் மாவட்ட சிறுநீரக நோயாளர்கள் மாத்திரம் இன்றி வெளிமாவட்ட சிறுநீரக நோயாளர்களும் பயன் பெறும் வகையில் அந்த பிரிவின் வைத்தியர்கள், தாதியர்களின் ஒத்துழைப்பில் இச் சிகிச்சை நிலையம் வளர்ச்சியடைந்துள்ளதுடன், ஒரே நேரத்தி 8 நபர்கள் குருதி சிகிச்சையை பெறும் அளவுக்கான கொள்ளளவை கொண்டுள்ளது.
வைத்தியரின் கோரிக்கை
நாடளாவிய ரீதியில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சிகிச்சை பிரிவினை முழுமையாக பயன்படுத்துமாறு வைத்தியர் சிசில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுநீரக நோயுடன் தொடர்புபட்ட அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்திய சாலை வைத்தியர் ஊடாக தங்களது சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவினுடைய சிகிச்சையை பொது மக்கள் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருந்து பொருட்களின் விலையேற்றம் வாழ்க்கைச் செலவுகள் உட்பட அனைத்தும் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் செலவை குறைத்து அவர்களுக்கு திருப்தியான சேவையை வழங்குவதற்கான மேலதிக வாய்ப்புக்களையும் வளங்களையும் இவ் சிகிச்சை பிரிவின் வைதியர்கள் தேடி வருகின்றனர்.
சர்வதேச தரம் மிக்க சிகிச்சையையும் ஒரே நேரத்தில் 20 மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வாய்ப்புக்களை இப் பிரிவினர் உருவாக்க காத்திருக்கின்றனர்.
இவ்வாறான சிகிச்சை பிரிவு மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றமை சிறப்பே. இவ் சிகிச்சை பிரிவின் வளர்ச்சிக்காக நன்கொடைகளையோ அல்லது மருத்துவ உதவிகளையோ சிகிச்சை உபகரணங்களுக்கான உதவிகளையோ வழங்கக்கூடியவர்கள் வழங்க முன்வருவது காலத்தின் தேவையாகும்.