ராஜபக்சர்களால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அழுத்தம் - திஸ்ஸ அத்தநாயக்க
நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துவதற்காக அல்லது அதனை ஒத்திவைக்கும் நோக்கில் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயக விரோத செயல் எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் எந்தக் காரணத்திற்காக அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது.
குறிப்பாக இவ்வளவு காலமும் கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஒத்திவைக்கும் நோக்குடனேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகளை குறிப்பி அரசியல் அமைப்புச் சபையின் செயற்பாடுகள் இதன் ஊடாக பாதிப்படையும். அதன் பின்னர் என்ன நடக்கும்? அனைத்து குழுக்களுக்கும் மீள உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த செயற்பாடுகளை மீள புதிதாக ஆரம்பிக்க வேண்டும். இதன் ஊடாக தாமதம் ஏற்படும்.
கணக்காய்வு குழு மற்றும் கோப் குழு என்பன கடந்த காலங்களில் மிக முக்கிய விடயங்களை செயற்படுத்தியுள்ளன. குறிப்பாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் வெளிக்கொண்டுவரப்பட்டன.
இவ்வாறான சூழலில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த விடமானது அரசாங்கத்திற்கு ஏதேனும் பாதிப்பினை ஏற்படுத்தியதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
விசேட காரணம் ஒன்று காணப்படுமாயின் அது தொடர்பில் அரச தலைவர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனைவிட சபைக்குள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகள் மற்றும் செயற்குழுக்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் விடயங்களை நிறுத்துவதற்காக அல்லது ஒத்திவைக்கும் நோக்கிலுமே சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.
இது ஜனநாயக விரோத செயல். யாப்பில் அவருக்கு அதிகாரம் காணப்படுகிறது என்றாலும், இவ்வாறான நிலைமையில் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்ததன் ஊடாக ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.