இறுதி நிமிட பேச்சும் தோல்வி...!!! பெரும் துன்பத்தை அனுபவிக்கவுள்ள பிரித்தானியர்கள்
மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு பாரிய பணிப்புறக்கணிப்பு
பிரித்தானியாவில் கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு பாரிய அளவான தொடரூந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்காரணமாக இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் சேவைகளுக்கு இடையூறு ஏற்படவுள்ள நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் பயணங்களின் போது பாரிய துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என பிரித்தானிய அமைச்சர் சைமன் கிளார்க் எச்சரித்துள்ளார்.
இறுதி நிமிட பேச்சுக்கள் தோல்வி
பிரித்தானிய தொடரூந்து ஊழியர்களின் தொழிற்சங்கத்தினருக்கும் தொடரூந்து நிர்வாகத்தினருக்கும் இடையில் இறுதி நிமிட பேச்சுக்கள் இடம்பெற்றிருந்த போதிலும் அது வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் பெரும்பாலான முக்கிய வழித்தடங்கள் ஊடான தொடரூந்து சேவைகள் இடைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகரிக்கப்படாத சம்பளம், முன்மொழியப்பட்டுள்ள தொழில் குறைப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் தொடரூந்து ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு இல்லாத நாட்களிலும் குறைந்த அளவான ஊழியர்களே பணிகளில் ஈடுபடுவார்கள் என்பதால் அன்றைய நாட்களிலும் சேவைகளில் இடையூறு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமான தேவைகளுக்காக மாத்திரம்
ஆகவே அத்தியாவசியமான தேவைகளுக்காக மாத்திரம் தொடரூந்துகளில் பயணிக்குமாறும் தொடரூந்து வலையமைப்பு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லண்டன் சுரங்க வழி தொடரூந்து சேவைகளும் தொழிற்சங்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் என்பதால், லண்டனுக்கு செல்லும் பயணிகள் நடந்து அல்லது துவிச்சக்கர வண்டியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான தொடரூந்து அட்டவணையானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.