ஏமாற்றப்பட்ட சிறிலங்கா இராணுவ சிப்பாய் - துப்பாக்கியை திருடிய பிக்கு பிடிபட்டார்
சிறிலங்கா இராணுவ சிப்பாயை ஏமாற்றி அவரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அவற்றுக்குரிய மகசீன் ஆகியவற்றை திருடிச் சென்ற பிக்குவும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் தங்கியிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ சிப்பாயை ஏமாற்றி
பனாகொட இராணுவ முகாமை அண்டிய இராணுவ குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இராணுவ சிப்பாயை ஏமாற்றி கடந்த 3 ஆம் திகதி இரவு இவரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி, 4 மகசின்கள், 120 தோட்டாக்கள் மற்றும் பாதுகாப்புப் பை என்பன திருடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பக்க சாலையில் உள்ள ஒரு கற்குகையின் கீழ் 30 திருடப்பட்ட தோட்டாக்கள் அடங்கிய ஒரு மகசினை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பாதுகாப்பு கமராவால் பிடிபட்ட பிக்கு
அதன்பின்னர் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
