பிபின் ராபத்தின் இறப்பு உறுதியானது!! பாதுகாப்புத்துறை அமைச்சர் இரங்கல் செய்தி
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராபத்தின் திடீர் மறைவு நாட்டுக்கும், இராணுவத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குன்னூர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
“தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகொப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் திடீர் மறைவு நமது இராணுவத்துக்கும் நாட்டுக்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். ஜெனரல் ராவத் நாட்டிற்காக துணிச்சலுடனும், விடாமுயற்சியுடனும் சேவையாற்றினார். முதல் பாதுகாப்புப் படைத் தளபதியாக அவர் எமது ஆயுதப் படைகளின் இணைந்த செயற்பாட்டுக்கான திட்டங்களைத் தயாரித்திருந்தார்.
இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெலிங்டனில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.