தாயகத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வுகள்
ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கறுப்பு ஜுலை கலவரம் இடம்பெற்று இன்றுடன் 40 ஆண்டு நிறைவுடையும் நிலையில், யாழ்ப்பாணத்தில் கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வுகள் உணர் வெளிச்சியுடன் இடம்பெற்றுள்ளன.
இதன் போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் தூவியும், மெழுகு திரி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கையின் பல பகுதிகளில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி முதல், தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
இந்த ஜுலை கலவரம் இடம்பெற்று இன்றுடன் 40 ஆண்டு நிறைவு பெறுகின்றன. இந்த நிலையில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையிலும் யாழ் பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்
ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு ஜுலை நினைவேந்தல் யாழில் கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில் இன்று மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது கறுப்பு ஜுலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஏனையவர்களும் சுடரேற்றி அஞ்சலி செய்தனர்.
மேலும் நினைவேந்தல் பதாகையில் 1983 கறுப்பூ ஜுலை தமிழினப் படுகொலையானது சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் நாடு முழுவதும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் நினைவுகூறுகிறோம் எனவும்1948 முதல் இன்றுவரை நடைபெற்ற நடைபெறுகின்ற இன அழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றவாறாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஊடகப் பேச்சாளர்களாக சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி காண்டீபன் உட்பட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலைக்கழகத்தில்
கறுப்பு ஜூலை நினைவுதினம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23)உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலி

இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பலரும் கலந்துகொண்டு அஞ்சலி

1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.











