யாழில் சம்பவம் - நடத்துனரை பேருந்திலிருந்து தள்ளி விழுத்திய இளைஞன்
யாழில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (05.12.2025) மாலை 5.30 மணியளவில் யாழ். காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியில் சேவையில் ஈடுபடும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அருகே இளைஞர் ஒருவர் குறித்த பேருந்தில் ஏறி பயணித்துள்ளார்.
கட்டண விளக்கம்
குறித்த இளைஞர் 100 ரூபாவைக் கொடுத்து நடத்துனரிடம் பலாலி சந்தி எனக் குறிப்பிட்டு ரிக்கெற் எடுத்துள்ளார். நடத்துனர் மீதி 10 ரூபாயை இறங்கும் போது தருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது குறுக்கிட்ட இளைஞர் 70 ரூபாய் ரிக்கெட்டுக்கு எதற்கு 100 ரூபாய் வாங்குகிறாய் என நடத்துனரிடம் கடுமையாக முரண்பட்டுள்ளார்.
அதற்கு நடத்துனர் எங்களுக்கு பயணிகளிடம் கூடுதலாக பணம் அறவிட வேண்டிய அவசியமில்லை, பேருந்தின் கதவுக் கண்ணாடியில் கட்டண விளக்கம் ஓட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெளிவடையுமாறு கூறியுள்ளார்.
தலைக்கவசத்தால் நடத்துனரைத் தாக்கிய இளைஞர்
கோண்டாவில் சந்தியில் மீண்டும் குறித்த இளைஞர் முரண்பட்டதனை தொடர்ந்து 100 ரூபாவை இளைஞரிடம் வழங்கிய நடத்துனர், எங்கள் பேருந்தில் இருந்து இறங்கி பின்னுக்கு வரும் பேருந்தில் ஏறி வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் நடத்துனரைத் தாக்கிய இளைஞர், பேருந்தின் படியில் இருந்தும் அவரை கீழே தள்ளி விழுத்தியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் காவல்துறையினர் இரு தரப்பையும் விசாரித்ததனை தொடர்ந்து குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞனை காவல்துறையினர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |