பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளல் : பிரதமரின் அறிவிப்பு
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த நீதிமன்ற வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வியமைசருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வயதெல்லை திருத்தம் செய்யப்பட்டு பரீட்சையை நடத்தி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரிய ஆரச்சி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், ”அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியும். அந்த வகையில் நாட்டில் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ், சிங்கள, ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 40 வயது என்ற உச்ச வயது எல்லையை 45 ஆக இந்த சந்தர்ப்பத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் விதத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு இதுவரை வழங்கப்படாத நிலையில் இதுவரை பரீட்சையை நடத்துவதற்கு முடியாத நிலையே காணப்பட்டது.
ஆசிரியர் சேவை
அந்த வகையில் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் உத்தரவுக்கு இணங்க இலங்கை ஆசிரியர் சேவையில் அவர்களை இணைத்துக் கொள்ளும் வகையில் பாடசாலைகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்க சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கு கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் தொடர்பில் மீண்டும் மேன்முறையிட்டு நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்ததன் பின்னர் மேன் முறையீட்டு நீதிமன்ற வழக்கு கடந்த மாதம் 20ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அந்த வகையில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழக்குத் தீர்ப்பின்படி, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளையும் வயதெல்லையை நிர்ணயம் செய்து ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லையை நிர்ணயம் செய்து தனித்தனியாக பரீட்சைகளை நடத்தி நிலவும் வெற்றிடங்களுக்காக ஆசிரியர் சேவையில் மூன்றாம் தரத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் எதிர்காலத்தில் வயதெல்லையை திருத்தம் செய்து பரீட்சையை நடத்தி ஆசிரியர் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதமர் தெரிவித்தார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |