சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த முறைப்பாடு தொடர்பில் லஞ்சம் ஊழல் ஆணைக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சபாநாயகர் ஒருவருக்கு எதிராக லஞ்சம் ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்துவது இதுவே முதல் முறை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எட்டு குற்றச்சாட்டுகள்
பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட செய்யப்பட்ட பிரதி செயலாளர் நாயகமும் நாடாளுமன்றப் பணியாளர்களின் தலைவருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன சமீபத்தில் சபாநாயகருக்கு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தார்.

இந்த முறைப்பாட்டில் சபாநாயகருக்கு எதிராக ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான எட்டு குற்றச்சாட்டுகளை குலரத்ன முன்வைத்துள்ளார்.
அதன்படி, சமிந்த குலரத்ன தாக்கல் செய்த முறைப்பாட்டில்,
- இரட்டை எரிபொருள் கொடுப்பனவுகளை சட்டவிரோதமாகப் பெறுதல்.
- தனிப்பட்ட அல்லது முறைசாரா நோக்கங்களுக்காக அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்துதல்.
- நாடாளுமன்ற ஊடகப் பிரிவின் உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துதல்.
- முறையான கட்டணம் செலுத்தாமல் பாராளுமன்றத்திலிருந்து உணவு பெறுதல்.
- சட்டவிரோதமாக ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து அவருக்கு அரசாங்க நிதியில் இருந்து சம்பளம் மற்றும் வசதிகளை வழங்குதல்.
- இரண்டு அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை தவறாகப் பயன்படுத்துதல்.
- தகவல் அறியும் உரிமையின் (RTI) கீழ் செய்யப்படும் கோரிக்கைகளைத் தடுத்தல்.
- நாடாளுமன்ற ஊழியர்களின் நிர்வாக விவகாரங்களில் சட்டவிரோதமாக தலையிடுதல் ஆகிய எட்டு குற்றச்சாட்டுகள் அடங்கும்.
சபாநாயகருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர உட்பட பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், முன்னாள் பிரதி செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற பணியாளர்கள் பிரிவின் தலைவருமான, சட்டத்தரணி சமிந்த குலரத்னவுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |