இலங்கைத் தமிழர்களை நாடுநடத்த பிரித்தானியா திட்டம்
இலங்கைத் தமிழர்களை மூன்றாம் நாடு ஒன்றுக்கு அனுப்ப பிரித்தானியா முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஒரு வருடத்திற்கும் மேலாக சாகோஸ் தீவுகளில் உள்ள தமிழ் அகதிகளுக்கான அடிப்படை உரிமைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துள்ளதாக கூறும் புலம்பெயர்ந்தோர் நலனுக்கான கூட்டு சபையின் பணிப்பாளரான ஜெஹ்ரா ஹசன், ருவாண்டா திட்டத்தைப் போலவே இலங்கை அகதிகளை மூன்றாவது நாட்டிற்கு அவர்கள் வெளியேற்றுவது போல் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
ருவாண்டா மாதிரியான திட்டம்
இவரது கருத்துக்கள் இவ்வாறு இருக்க, பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் உள்ள சாகோஸ் தீவுகளில் உள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள், தாம் ருவாண்டா மாதிரியான திட்டத்தின் கீழ் நாடு கடத்தப்படலாம் என்றும் அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குத் திரும்பலாம் அல்லது மூன்றாம் நாடு ஒன்றுக்கு வெளியேற்றப்படலாம் என இங்கிலாந்து அரச சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
மூன்றாம் நாடுகளுடனான பேச்சு

எனினும் சாத்தியமான திட்டம் குறித்து மூன்றாம் நாடுகளுடன் அரசாங்கம் ஏதேனும் குறிப்பிட்ட பேச்சுவார்த்தை நடத்தியதா என்ற விடயம் இதுவரை தெரியவரவில்லை.
20 குழந்தைகள் உட்பட சுமார் 120 தமிழ் மக்கள் இந்த தீவில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் அமெரிக்க - இங்கிலாந்து கூட்டு இராணுவ தளத்திற்குள் வேலி அமைக்கப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தமிழக முகாம்களில் இருந்து படகு மூலம் சென்றவர்களாவர். சித்திரவதைக்கு ஆளானவர்களும் அவர்களில் உள்ளடங்குவதாக அவர்களது சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
அவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் சட்டப் பிரதிநிதிகளை தொடர்பு கொள்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.