ரணிலின் திட்டம் பிசுபிசுப்பு -கையை விரித்தது மொட்டு கட்சி
முன்னாள் அதிபர் கோட்டாபய ஆட்சிக் காலத்தில் மீண்டும் அதிபருக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் 21 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை வலுவிழக்கச் செய்யும் வகையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 22 ஆவது திருத்தச் சட்டத் கொண்டு வரவுள்ளது.
இதற்கான விவாதம் அடுத்த இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், இன்று (19) இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு திருத்தத்திற்கும் ஆதரவில்லை

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆளும் கட்சி எம்.பிக்கள் கூட்டம், அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது, அதிபரின் அதிகாரங்களைக் குறைக்கும் எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த தான், 22ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
வேடிக்கையான திருத்தம்

மேலும், 22ஆவது திருத்தம் வேடிக்கையானது என்று தெரிவித்த கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர் அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து குழுவாக சேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு அதிபர் ரணில், எம்.பிக்களிடம் தெரிவித்துள்ளார்.