வெளிநாடொன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 42 பேர் பலி!
தென்னாபிரிக்காவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 42 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்னாபிரிக்காவின், பிரிட்டோரியா தலைநகரிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் ட்ரைகார்ட் நகர் அருகே நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்று மலைப் பகுதிகளுக்கு அருகே சென்றபோது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு பணிகள் தீவிரம்
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்துக்கான காரணம் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
