பேருந்து கட்டணம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
எரிபொருள் விலை குறைந்தால், அதன் பலனை மக்களுக்கு வழங்கி, தற்போது அதிகரித்துள்ள பேருந்து கட்டணத்தை மீண்டும் குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் அடிப்படையில் மீண்டும் கட்டண திருத்தம் செய்யப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
எரிபொருள் விலை
இந்த நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் கீழ், மீண்டும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கேற்ப அந்தந்த நேரங்களில் தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எனினும், அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்குச் சலுகைகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஒருவேளை எரிபொருள் விலை குறைந்தால், அதன் பலனை மக்களுக்கு வழங்கி, தற்போது அதிகரித்துள்ள பேருந்து கட்டணத்தை மீண்டும் குறைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |