விக்கி - சுமோ கூட்டணி...! உடன்படிக்கையால் வெடித்தது புதிய சர்ச்சை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், (M. A. Sumanthiran) தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரனும் (C. V. Vigneswaran) உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு தமிழ் மக்கள் கூட்டணியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து தமிழ் மக்கள் கூட்டணியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து ஆ.சுமந்திரன் மற்றும் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட சதிச்செயற்பாடுகளால் தன்னால் தமிழ்தேசிய நீரோட்டத்தில் தொடர்ந்து செயற்படமுடியாதுள்ளது என்று காரணம் கூறி அக்கட்சியிலிருந்து வெளியே வந்த க.வி.விக்னேஸ்வரன் தற்போது சி.வி.கே.சிவஞானம் தலைமையிலானதும் தமிழ்மக்களாலும் தமது கட்சி ஊறுப்பினர்களாலும் நிராகரிக்கப்பட்ட தமிழ் தேசியத்தை சிதைத்து தமிழரசுக் கட்சியை அழிக்கின்றார் என்று அவராலே சென்றவாரம் வரை குற்றம்சாட்டப்பட்ட ஆ.சுமந்திரனுடன் தமிழரசுக்கட்சி சார்பில் ஒப்பந்தம் செய்துள்ளமை விக்னேஸ்வரனின் சந்தர்ப்பவாத தமிழ்தேசியவிரோத சக்திகளுடனான வங்குரோத்து அரசியல் வியாபாரம் என்பதால் மிகவும் ஏமாற்றத்துடன் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
கட்சியிலிருந்து வெளியேற்றுதல்
தமிழ்தேசிய பரப்பில் இவருக்காக மீன்சின்னத்தை வழங்கி நாடாளுமன்றம் அனுப்பிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்காமல் யாரின் பதவி மோகத்திற்காகவும் எதற்காகவும் இந்த ஒப்பந்தம் என்பதை மான் சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
தமிழ்தேசியத்தையும் தமிழ்மக்களின் தேசிய நலன்களையும் பேச்சளவிலும் மட்டும் வைத்துக்கொண்டு தனது சொந்த நலன்களையும் தமிழ்தேசியவிரோத மேல்சாதிய கோட்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் யுத்தத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணில் எம் இளம்சமுதாயத்தை சீரழிக்கும் என்று தெரிந்துகொண்டும் தனது பிரத்தியோக ஆலோசகரின் ஆலோசனையையும் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தனது சுயலாபம் கருதி சாராயக்கடை அனுமதிபத்திரத்திற்கு சிபார்சுகடிதம் வழங்கிவிட்டு பிரத்தியோக ஆலோசகரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பின்னர் அதுபற்றி எதுவும் தெரியாதவர் போன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த நாடகத்தை நாம் நன்கு அறிவோம்.
தமிழ்தேசிய கொள்கை பற்றுள்ளவர்கள் கட்சியிலிருந்து மட்டுமல்ல அலுவலகத்திலிருந்தும் வெளியேற்றப்படுவது ஏன் என்பது இப்போது தெளிவாகின்றது.
ஈபிடிபியினருடன் ஒப்பந்தம்
தமிழ்தேசியத்தை நேசிப்பவர்களால் தமிழினத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்ட ஈபிடிபியினருடன் தமிழ்தேசியநலன்களை புறம்தள்ளி பதவிக்காகவும் தமிழ்தேசியம் ஒற்றுமைபடுவதை சிதைக்கும் எண்ணகருவுடன் ஒப்பந்தம் செய்த சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான தமிழரசுக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்ததன்முலம் முன்னர் வி.மணிவண்ணன் முதல்வர் பதவிக்காக ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைத்தமையை போன்று இப்போதும் தமிழ் மக்கள் கூட்டணியில் நடப்பதால் இப்படியான அரசியல் வியாபாரத்திற்காகதானோ தமிழ்தேசியகொள்கை பற்றாளர்கள் மணிவண்ணனின் உள்வருகையுடன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது நிதர்சனமாகின்றது.
விக்னேஸ்வரன் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியபோது அவர் தமிழ்தேசிய வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் என்ற பெரும்நம்பிக்கையுடன் மக்கள் ஆதரவு காட்டினர் நாமும் அவ்நம்பிக்கையுடனே தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்காக உழைத்தோம்.
எனினும் முன்னர் சுமந்திரனிடம் சூடு வாங்கிய விக்னேஸ்வரன் மீண்டும் சூடு வாங்க உள்நுழைந்துவிட்டார் நல்ல மாட்டிற்கு ஒரு சூடு போதும். அவனே கொள்கை பற்றாளனாக மதிக்கப்படுவான் போற்றுதலுக்குரியவன்.
சூடு சொரணை இல்லாதவர்கள் எம் தமிழ்தேசியப்பரப்பில் எதற்காக? எம்வாக்குகளால் அவர்களும் அவர்சார்ந்தவர்களும் சொந்த நலன்களை அனுபவித்தது போதும். இவ்வாறானவர்களை இணங்கண்டு நீக்கிவைத்து நாம் தமிழர்களாக எம்தேசியத்திற்காக ஒன்றிணைவோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

