யாழ். மாநகர சபையின் புதிய மேயராக தெரிவு செய்யப்பட்ட பெண்மணி
புதிய இணைப்பு
யாழ்ப்பாண மாநகர சபையின் (Jaffna Municipal Council) முதல்வராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் (13) யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய மேயர் தெரிவு
45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் விவேகானந்தராஜா மதிவதனியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாரும் போட்டியிட்டனர்.
விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைத்தது.
தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர். இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன், பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இன்று அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சை ..! யாழ். மாநகர சபையின் புதிய மேயர் யார்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் (Jaffna Municipal Council ) மேயர் பதவியை கைப்பற்ற மூன்று கட்சிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
யாழ் மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (12) யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு 23 ஆசனங்கள் தேவை.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி 13, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12, தேசிய மக்கள் சக்தி 10, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP), ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவை தலா 4, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, ஆகியன தலா ஓர் ஆசனத்தையும் பெற்றிருந்தன.
யாழ். மாநகர சபையில் ஆட்சி
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் மேயராக விவேகானந்தராஜா மதிவதனி, பிரதி மேயராக இம்மானுவல் தயாளன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் கூட்டாக செயல்பட இணக்கம் எட்டியுள்ளன.
இதன் படி, அந்த கூட்டணியின் சார்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கனகையா சிறீ கிருஷ்ணா மேயர் பதவிக்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் துரைராஜா ஈசன் பிரதி மேயர் பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ முடிவை அறிவிக்கவில்லை
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மேயர் பதவிக்கு சுந்தரமூர்த்தி கபிலன் போட்டியிடுவார் என்று அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினரும் அமைச்சருமான இ. சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஈழமக்கள் ஜனநாயககட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி (UNP) ஆகியன இலங்கை தமிழ்அரசுக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும்,இந்தக் கட்சிகள் தமது உத்தியோகபூர்வ முடிவை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





