நாட்டைக் கட்டியெழுப்ப இலங்கையர்களாக ஒன்றிணைய அழைப்பு
நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையில் விருத்தி ஏற்பட சகலரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடனில்லாமல், சொந்தக்காலில் நிற்கும் எதிர்கால சந்ததியை பற்றி சிந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“இன்னுமொரு நாட்டிடம் பொருளாதாரத்திற்காக தங்கியிராது எமது நாட்டின் தலைவர்கள் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கவும், ஏற்றுமதிகளையும் அதிகரிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்.
இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
எமது நாட்டில் ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் கௌரவம் வளர்ந்த பல நாடுகளில் வாழும் படித்தவர்கள், வர்த்தகர்கள், கோடீஸ்வர்களுக்கும் இல்லை.
இதனை வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளிடம் கேட்டால் அது பற்றி கூறுவார்கள்” என்றார்.