கனடாவில் கொண்டுவரப்பட உள்ள புதிய சட்டம்
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை கனடா அரசு சமர்ப்பித்துள்ளது.
கனடா நாடாளுமன்றத்தின் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லரால் நேற்று (10) 'பாதுகாப்பான சமூக ஊடகச் சட்டம்' என்ற பெயரில் இந்த வரைவுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
இருப்பினும், அவுஸ்திரேலிய சட்டத்தை விட கனடாவின் இந்த புதிய சட்டமூலம் சற்றே வித்தியாசமானது எனக் குறிப்பிடப்படுகிறது.
கடுமையான நடவடிக்கைகள்
அதன்படி, சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான முறையான கொள்கைகளைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தக்கூடிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த புதிய சட்டத்தின் மூலம் ‘ChatGPT’ போன்ற AI செட்போட்களை ஒழுங்குபடுத்தவும், இணையம் வழியாக பரவும் "தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை" கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் சிறுவர்களை அவதூறு செய்தல், வெறுப்பை பரப்புதல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 துறைகளின் கீழ் வரும் விடயங்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் கனேடிய டொலர்கள் (7 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அல்லது அந்த நிறுவனத்தின் உலகளாவிய மொத்த வருவாயில் 3% அபராதமாக விதிக்கப்படும்.
வழக்குத் தொடர்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல்களைக் கண்காணிப்பதற்காக 'கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணைக்குழு' என்ற பெயரில் ஒரு சுயாதீன அமைப்பும் நிறுவப்படவுள்ளது.
சமூக ஊடகத் தடை
ஏற்கனவே பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இவ்வாறான சட்டங்களை விதித்துள்ளதுடன், பிரிட்டனும் அடுத்த வாரம் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அறிவிக்கத் தயாராகி வருகிறது.

இந்தச் சட்டமூலத்தின் மூலம் இணைய தணிக்கை அல்லது கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம் என்று சில தாராளவாத அமைப்புகள் எச்சரிக்கின்றன.
இப்பிரச்சினையை கனடாவில் உள்ள சாதாரண குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் தீர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |