கனடாவில் தீவிரமாய் பரவும் காட்டுத்தீ - முக்கிய மாகாணமே தீக்கிரை
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Tumbler Ridge பகுதியில் செவ்வாய்க்கிழமையில் இருந்தே ஆரம்பமான இந்த காட்டுத்தீ முழுவதும் தீ வியாபிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து வியாழக்கிழமை மதியத்திற்கு மேலிருந்தே குடியிருப்புவாசிகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். இதுவரை 2,400 குடியிருப்பாளர்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
வியாழன் மாலை 9,600 ஹெக்டேரில் வியாபித்திருந்த தீ, வெள்ளிக்கிழமை பிற்பகலில் 23,000 ஹெக்டேராக, அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
தீயணைப்பு வீரர்கள் குழு தற்போது Bearhole Lake சாலை அருகே முகாமிட்டுள்ளதாகவும், தீ மேற்கு நோக்கி பரவுவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
காலநிலையை பொறுத்து காட்டுத்தீயின் வெப்பம் கடுமையாக இருப்பதாகவும், இதனால் நேரிடையாக காட்டுத்தீயை கட்டுப்படுத்த முயற்சிப்பது பாதுகாப்பற்ற செயல் எனவும் கூறுகின்றனர்.
Tumbler Ridge பகுதியில் சுமார் 150 பேர்கள் தங்கள் குடியிருப்பில் தங்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் சில தீயணைப்பு வீரர்களுடன் களமிறங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
காட்டுத்தீ காரணமாக பிரதானசாலை 52 மூடப்பட்டுள்ளதாகவும், வெளியேறும் மக்கள் பிரதான சாலை 29ஐ பயன்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
