கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய யுவதி
பல மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹஷீஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் நேற்றிரவு (23) இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 18 வயதுடைய கனடா நாட்டைச் சேர்ந்த யுவதி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருளின் மதிப்பு
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 352 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர், நேற்று இரவு (23) சுமார் 10:40 மணியளவில், கனடாவின் டொராண்டோவிலிருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானம் EK 648-ல் இலங்கைக்கு வந்தடைந்தார்.
சோதனையின் போது, சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,265 கிராம் (35.265 கிலோகிராம்) போதைப்பொருளைக் கண்டுபிடித்தனர்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தற்போது முதற்கட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |