உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுமா..!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக(2023 ) சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் சில வாரங்களுக்குள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி இவ்விடயத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஆலோசனை
இது தொடர்பான, பிரேரணை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உள்ளூராட்சி தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதால், வேட்புமனு தாக்கல் செய்த அரசு ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளதால், உரிய வேட்புமனுக்களை ரத்து செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், இதற்காக நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டுமெனவும், இந்த விடயம் தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
