விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் வரும் ஜூலை 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, வீதியை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாட்சிகள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
இதன் காரணமாகவே வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்திற்கு ஒத்திவைக்க நீதிமன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி, அப்போதைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் சைத் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் போது கொழும்பு, தும்முல்ல பகுதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் போக்குவரத்துக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வழக்குத் தாக்கல்
இந்தச் சம்பவம் தொடர்பாக விமல் வீரவங்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக, வீதிகள் கட்டளைச் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டத்தின் கீழ் குருந்துவத்தை காவல்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கின் மேலதிக சாட்சிகளை ஆராய்வதற்காக அடுத்த கட்ட விசாரணையை ஜூலை மாதம் 13 ஆம் திகதிக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |