ஈழப் போரில் புகைப்படங்கள்... பாடங்களை புகட்டும் புலிகளின் புகைப்படங்கள்... உலகப் புகைப்பட நாள்...
ஈழத் தமிழர்களின் வாழ்வில் புகைப்படங்கள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இன்று நாம் பார்க்கும் விடுதலைப் புலிப் போராளிகளின் சில படங்கள், நாம் திரும்பிச் செல்ல முடியாத ஒரு காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
அவைகள் அந்தப் போராளிகளின் உயரிய இலட்சியத் தாகத்தை, ஒழுக்கம் மிகுந்த பயணத்தை, மக்களுக்கான விசுவாத்தை இன்னும் ஏராளமானவற்றை எமக்குச் சொல்கின்றன.
ஒரு வகையில் பெரும் காவியங்கள் சொல்லுகிற பாடங்களை அப் புகைப்படங்கள் எமக்குக் கற்பிக்கின்றன. இதுவே புகைப்படங்களின் மிக முக்கிய சக்தி. உலகில் புகைப்படங்கள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் திருப்புமுனைகளை நிகழ்த்தியுள்ளன.
புகைப்பட தினம்
நேப்பாம் சிறுமி’ என்று உலகம் அறிந்த வியட்நாம் போரின் புகைப்படம், 1972ஆம் ஆண்டு நிக் உட் பிடித்த படம். நேப்பாம் குண்டுவீச்சுக்குப் பின்னர் உடலில் தீக்காயங்களுடன் நிர்வாணமாக ஓடிவரும் ஒன்பது வயது சிறுமி கிம் ஃபுக் இடம்பெறும் புகைப்படம், போரின் கொடூரத்தை உலகின் கண்முன் கொண்டுவந்தது.
அதேபோன்று, 1993ஆம் ஆண்டு கெவின் கார்ட்டர் எடுத்த “The Vulture and the Little Girl” என்ற சோமாலியா பஞ்சப் புகைப்படம், பட்டினியால் சோர்ந்து விழுந்து கிடக்கும் ஒரு குழந்தையின் அருகே காத்திருக்கும் கழுகை பதிவு செய்தது.
இந்தப் படம் ஆப்பிரிக்கப் பஞ்சத்தின் மனித அவலத்தை உலக மனச்சாட்சிக்கு முன்வைத்ததோடு, புகைப்படக் கலைஞரின் பொறுப்பு, ஊடகத்தின் நெறிமுறை, ஒரு துயரத்தைப் பதிவு செய்வதற்கும் அதற்கு உதவுவதற்கும் இடையிலான எல்லை ஆகியவற்றைப் பற்றிய தீவிரமான விவாதத்தையும் உருவாக்கியது.
இந்த ஒரு புகைப்படம் ஆயிரம் சொற்களைவிட வலிமையானதாக இருப்பதுடன் ஒரு முழு உலகத்தையே கேள்விக்கு உள்ளாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. ஆண்டுதோரும் ஆகஸ்ட் 19ஆம் நாளன்று உலக புகைப்பட நாள் கொண்டாப்படுகிறது.
உண்மையில் இந்த நாளை மனிதன் ஒரு தருணத்தைத் தனது நினைவிலிருந்து பிரித்து, ஒரு காட்சியாக நிரந்தரப்படுத்திய தினமெனலாம். 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் பிரான்ஸ் அரசு லூயி டாகேரால் உருவாக்கப்பட்ட டாகேரியோடைப் (Daguerreotype) எனும் புகைப்பட முறையை உலகிற்கு அறிவித்தது.
அந்த அறிவிப்பே நவீன புகைப்பட வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது. ஆனால் புகைப்படத்தின் உண்மையான முக்கியத்துவம் என்பது ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பில் மாத்திரம் இல்லை.
அது காலத்தை நிறுத்தி வைக்கும் மனிதனின் கலை முயற்சியில்தான் மகத்துவம் பெறுகிறது. வாழுகின்ற ஒரு கணம் அடுத்த கணத்திலேயே கடந்த காலமாகிவிடுகிறது.
ஆனால் அந்தக் கணத்தை ஒரு புகைப்படமாகப் பிடித்துவிட்டால், அது ஆண்டுகள் கடந்தும் நம்மிடம் திரும்பி வருகிறது. அதனால்தான் புகைப்படம் ஒரு காட்சியாக மாத்திரமன்றி நினைவாகவும் சாட்சியாகவும் வரலாற்றின் நிழலாகவும் நிலைக்கிறது.
ஒரு குடும்பத்தில் ஒரு புகைப்படம்
ஒரு பழைய வீட்டில் கிடக்கும் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் இருப்பவர்கள் இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம். அந்த வீட்டே இல்லாமல் போயிருக்கலாம்.
அந்தக் காலத்தின் உடைகள், முகங்கள், வீதிகள், வீடுகள், வாகனங்கள், திருமண முறைகள், பள்ளி வாழ்க்கை என அனைத்தும் மாறியிருக்கலாம். ஆனால் அந்தப் புகைப்படம் மட்டும் கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது.
ஒரு தந்தையின் இளமைப் படம், ஒரு தாயின் திருமணப் படம், பள்ளி மாணவர்களின் குழுப்படம், குழந்தையின் முதல் பிறந்தநாள், குடும்பம் ஒன்றாகச் சேர்ந்த ஒரு விழா—இவை அனைத்தும் தனிப்பட்ட நினைவுகள் போலத் தோன்றினாலும், அவை சமூக வரலாற்றின் சிறு ஆவணங்களாகவும் மாறுகின்றன.
ஈழத் தமிழர் வாழ்வில் புகைப்படம்
ஈழத் தமிழர் குடும்பங்களில் புகைப்படத்தின் அர்த்தம் இன்னமும் உணர்வுபூர்வமானது. பண்பாட்டையும் போராட்டத்தையும் வரலாற்றையும் வெளிப்படுத்துகிற மிகப் பெரிய கருவி. போர், இடப்பெயர்வு, காணாமலாக்கம், மரணம், அகதி வாழ்க்கை என ஒரு தலைமுறையின் வாழ்க்கை சிதறியபோது, பல குடும்பங்களிடம் உறவினர்களை நினைவுகூர வைத்திருப்பது புகைப்படங்கள்தான்.
ஈழத்தில் சில வீடுகளில் ஒரு புகைப்படம் ஒரு மனிதரின் முழு வரலாற்றையும் சொல்லியபடி இருக்கிறது. காணாமல் போனவரின் புகைப்படம் இன்று ஒரு குடும்பத்தின் கையில் இருக்கும் ஒரே அடையாளம்.
போரில் இறந்த ஒருவரின் புகைப்படம் அவரது இருப்புக்கான நினைவுச் சின்னம். எனவே ஈழத்தில் புகைப்படம் என்பது அழகிய நினைவுகளை மட்டும் பதிவு செய்த ஊடகமாக மாத்திரமின்றி அது இழந்தவர்களின் இருப்பைத் தொடர்ந்து காக்கும் ஒரு கருவியாகவும் மாறியிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போரின் சாட்சியாகவும் நீதிக்கான கருவியாகவும் உள்ளன. குடும்பப் புகைப்படங்கள், இடம் மற்றும் காலத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் பொருட்களாகக் கருதப்பட்டுள்ளன.
போரில் புகைப்படங்கள்
ஈழத்தின் நவீன வரலாற்றை எழுத்துக்களால் மட்டும் எழுத முடியாது. அந்த வரலாற்றின் ஒரு பகுதி புகைப்படங்களில் உறைந்திருக்கிறது.
கிராமங்களின் பழைய தோற்றங்கள், யாழ்ப்பாணத்தின் நகர வாழ்க்கை, வடக்கு கிழக்கின் விவசாயப் பண்பாடு, பாடசாலைகள், கோயில்கள், சந்தைகள், திருமணங்கள், கலை நிகழ்வுகள், போராட்டங்கள், இடப்பெயர்வுகள், அகதி முகாம்கள் - இவை அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் புகைப்படங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போர் தீவிரமடைந்தபோது புகைப்படத்தின் பணி இன்னும் கடினமாகிற்று. சாதாரண வாழ்க்கையின் காட்சிகளைப் பதிவு செய்த கமரா, பின்னர் குண்டுவீச்சின் பின்னணியையும், இடிந்த வீடுகளையும், அகதிகளின் முகங்களையும், காயமடைந்தவர்களையும், அழிக்கப்பட்ட நிலங்களையும் பதிவு செய்யதிற்று.
புலிகளின் புகைப்படங்கள்
ஈழப் போராட்டத்தின் காலப்பகுதியில் புகைப்படம் ஒரு தனிப்பட்ட கலைச் செயற்பாடாக மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகக் கட்டமைப்புக்குள் புகைப்படத்துறையும் ஒரு ஆவணப் பணியாக வளர்க்கப்பட்டது.
கிடைக்கக்கூடிய போர்க்கால வெளியீடுகள், அத்துடன் அந்தப் புகைப்படப்பிரிவு வெறும் இராணுவக் காட்சிகளை மட்டும் பதிவு செய்யவில்லை.
2004ஆம் ஆண்டு வெளியான போராளிக் கவிஞர் அம்புலியின் ‘மீண்டும் துளிர்க்கும் வசந்தம்’ என்ற கவிதைத் தொகுப்பில், அதன் புகைப்படங்களை புலிகளின் புகைப்படப்பிரிவை சேர்ந்த போராளி கஜானி உள்ளிட்டோர் பதிவாக்கினர்.
போராட்டத்தின் அரசியல், சமூக, கலை, கலாசார, அபிவிருத்தி நிகழ்வுகளையும் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டன. அதாவது, ஒரு போராட்டத்தின் ஆயுதக் களத்தை மட்டும் அல்லாமல், அதன் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட சமூக வாழ்வையும் ஆவணப்படுத்தும் முயற்சியாக புகைப்படத்துறை இயங்கியிருந்தது.
இதன் முக்கியத்துவத்தை இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு காலத்தைப் பற்றி அரசியல் உரைகள் பலவிதமாகச் சொல்லலாம்.
ஆனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் முகங்கள், அவர்கள் வாழ்ந்த இடங்கள், நிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள், நினைவேந்தல்கள், போராளிகளின் வாழ்க்கை, மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் ஆகியவற்றை பதிவு செய்த புகைப்படங்கள் அந்தக் காலத்தின் காட்சி ஆவணங்களாக ஈழ வரலாற்றில் தங்குகின்றன.
இன்று ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்த பல ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள சில புகைப்படங்களே அரிய வரலாற்றின் ஆவணங்களாக உள்ளன.
இறுதிப் போரில் புகைப்படத்தின் சாட்சியம்
2009ஆம் ஆண்டின் இறுதிப் போருக்காலத்தில் புகைப்படமும் காணொளியும் மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றன.
சர்வதேச ஊடகங்களின் நேரடி அணுகல் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த சூழலில், பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரின் கையடக்கத் தொலைபேசிகளில் பதிவான காட்சிகள் பின்னர் உலகின் கவனத்துக்குச் சென்றன.
சனல் 4 வெளியிட்ட Sri Lanka's Killing Fields மற்றும் அதன் தொடர்ச்சியான War Crimes Unpunished ஆகிய ஆவணப்படங்கள் புகைப்படங்கள், காணொளிகள், நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை இணைத்துப் போரின் இறுதிக்கட்டத்தைப் பேசின.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அரங்குகளிலும் காட்டப்பட்டன. இறுதிப் போரின் காட்சிகள் தொடர்பான விசாரணைகளில் புகைப்படங்களும் காணொளிகளும் முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டன.
இன்று முள்ளிவாய்க்கால் குறித்து பேசும்போது, புகைப்படங்கள் வெறும் கடந்த காலத்தின் காட்சிகளாகவன்றி, அவை இனப்படுகொலை குறித்து பதில் கேட்கும் சாட்சிகளாக உள்ளன.
இறுதிப் போரில் மனிதர்களுடன் புகைப்படங்களும் அழிக்கப்பட்டன. பல லட்சம் பேரின் புகைப்படங்களும் ஆல்பங்களும் அழிக்கப்பட்டதும் இந்த நாளின் முக்கியமான விசயமாகும்.
புகைப்படங்களை பாதுகாப்பது
ஈழத் தமிழர்களிடம் இன்று பல ஆயிரக்கணக்கான தனிப்பட்ட புகைப்படங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் எத்தனை பாதுகாப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன? எத்தனை புகைப்படங்களின் பின்னணி, திகதி, இடம், பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
புகைப்படத்தை எடுப்பது மட்டும் போதாது. அதை பாதுகாக்க வேண்டும்.
அதன் பின்னணியை எழுத வேண்டும். அதில் இருப்பவர்களின் பெயர்களைச் சேமிக்க வேண்டும்.
பழைய புகைப்படங்களை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்ற வேண்டும். குடும்பங்களின் தனிப்பட்ட புகைப்படத் தொகுப்புகள் நாளைய சமூக வரலாற்றின் அரிய ஆவணங்கள்.
போருக்குள் மிகச் சிறிய வயதில் இருந்தே புகைப்படங்களை தேடுகிறவனாகவும் பிறகு அதனை முள்ளிவாய்க்காலில் அழிவுக்குப் பறிகொடுத்தவனாகவும் அது பற்றி நடுகல் நாவலின் வழியாக பேசி ஆவணப்படுத்திய வகையிலும் இந்த நாள் என்பது எங்கள் ஈழ மண்ணுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் ஒரு மிக முக்கிய நாளாகவும் உணர முடிகிறது.
ஒரு புகைப்படத்தை அழிப்பது என்பது ஒரு காட்சியை அழிப்பதாக மாத்திரம் முடிவதில்லை. ஒரு குடும்பத்தின், ஒரு தலைமுறையின் ஒரு இனத்தின் நினைவையே அழிப்பது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 18 August, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.