தேசபந்துவை தொடர்ந்து சாமர சம்பத் விடுத்துள்ள கோரிக்கை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) தனக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு (Colombo) சிறைச்சாலை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் வசதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசபந்து தென்னகோனுக்கு அனுமதி
அதன்படி, அவருக்கு ஒரு பாய், தலையணை, தட்டு மற்றும் கோப்பை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கிடையில், கண்டி தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) வீட்டிலிருந்து உணவு கொண்டு வர சிறைச்சாலை அதிகாரிகள் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதன் காரணமாகவே சாமர சம்பத்தும் தனக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சாமர சம்பத் தசநாயக்கவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் (S. Viyalendiran) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் எம் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
