நாராஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் குழப்பம்!
நாராஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையின் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்று முற்பகல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மொடோர்னா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பல்கலைக்கழக மாணவர்கள் இக்குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.
இராணுவ வைத்தியசாலையில் மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படாது என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மொடோர்னா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக அதிகளவான பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவ வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்தின் கடித உறையின் கீழ், விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, தாம் வருகைத் தந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவ வைத்தியசாலையில் இன்று மற்றும் நாளைய தினங்களில் மொடோர்னா தடுப்பூசி பிற்பகல் 4 மணி வரை செலுத்தப்படுவதாக பல்கலைக்கழக கடித உறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவ அடையாள அட்டையை சமர்ப்பிப்பதன் ஊடாக, மொடோர்னா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக உப வேந்தரின் பெயரில் இந்த கடித உறை வெளியிடப்பட்டிருந்தது.
இராணுவ வைத்தியசாலையில் நேற்றைய தினம் மொடோர்னா தடுப்பூசி எந்த அடிப்படையில் செலுத்தப்பட்டது என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விமான கடவுச்சீட்டு கைவசம் வைத்திருந்த மாணவர்களுக்கு நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.