அமெரிக்காவில் பயங்கரம் - வீதியில் நடந்து சென்ற சிறுமியை பதம் பார்த்தது துப்பாக்கி
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வீதியில் நடந்து சென்ற சிறுமி சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அமெரிக்காவின் சிகாகோ நகர மருத்துவ பரிசோதகர் அலுவலகம் அருகே வீதியில் 8 வயது சிறுமி, தமது பாதுகாவலருடன் நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது கடையில் இருந்து வெளியேறிய இளைஞரை, அடையாளம் தெரியாதவர் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் குறி தவறி அந்த குண்டு சிறுமியின் தலையில் பாய்ந்தது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தாள். மேலும் அந்த இளைஞர் முதுகில் சுடப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கி தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார். நேற்றுவரை அவர் கைது செய்யப்படவில்லை. குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்படும் வரை ஓய்வெடுக்கப் போவதில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் டேவிட் பிரவுன் தெரிவித்துள்ளார்.
8 வயது சிறுமி மெலிசாவின் பரிதாபமான இந்த கொலை எங்கள் நகரத்தை உலுக்கி விட்டது. ஒரு குழந்தையின் உயிர் பறிபோகும் போது ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த குடும்பத்தின் துயரத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தமது ட்விட்டர் பதிவில் டேவிட் பிரவுன் கூறியுள்ளார்.
