தாய்,தந்தை கொடூர தாக்குதல் வீட்டைவிட்டு ஓடிய சிறுவனை மீட்ட காவல்துறை
தாய், தந்தையால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சிறுவன், வீட்டிலிருந்து தப்பியோடிய நிலையில், ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து ஹட்டன் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறை மா அதிபர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.
ஹட்டன் காவல் நிலையத்தின் பொறுப்பின் கீழிருக்கும் 15 வயதான சிறுவன், திங்கட்கிழமை (19) அதிகாலையில் மீட்கப்பட்டான்.அனுராதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் அம்பர் என்ற சிறுவனே இவ்வாறு, மீட்கப்பட்டார்.
கடுமையான முறையில் தாக்குதல்
மாணவனான இச்சிறுவன், கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயிலில் பயணித்துள்ளான். எனினும், ஹட்டன் ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில் நிலையத்தில் தன்னந்தனியாக இருந்துள்ளார். இது தொடர்பில் ஹட்டன் காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்தே, விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் சிறுவனை மீட்டுள்ளனர்.
தன்னுடைய பெற்றோர் அனுராதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்று தெரிவித்துள்ள சிறுவன், தன்னுடைய குடும்பத்தில் தனக்கு அக்காவும் அண்ணனும் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளான்.
எனினும், பாணந்துறையில் உள்ள பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து 10 ஆம் வகுப்பு வரையிலும் கல்விகற்றதாகவும், ஆனால் பாடசாலையில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டனர் என்றும் அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இருந்து பாணந்துறைக்கு வந்த தன்னுடைய தந்தையும் தாயும் வீட்டுக்குப் போவோமென பலவந்தப்படுத்தினர். அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே, இவ்வாறு கடுமையான முறையில் தாக்குதல் நடத்தியதாகவும் தன்னை கட்டிவைத்து தந்தை இடுப்பு பட்டியால் தாக்கியதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.
உடம்பில் காயங்கள்
தாய், தந்தையின் துன்புறுத்தலால், மீண்டும் வீட்டுக்குச் செல்லமுடியாது என்றும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். சிறுவனின் உடம்பில் காயங்கள் உள்ளமையால், அச்சிறுவனை டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தி, வைத்தியரின் அறிக்கையுடன் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுவனின் பாதுகாவலர்களை ஹட்டன் காவல் நிலையத்துக்கு வருகைதருமாறும் ஹட்டன் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
