சஜித்திற்கு ஆதரவு வழங்கிய சீனா! நேரில் சென்று சந்தித்த தூதுவர் கீ.சென் ஹோங் (படங்கள்)
நாட்டில் உள்ள வைத்தியசாலைகளின் சுகாதார நலன்களை மேம்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) எண்ணக்கருவின் பிரகாரம் அமைந்த ‘ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் கீ.சென்ஹோங் (K. Sen Hong) நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ.சென்ஹோங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் சந்தித்துள்ளனர்.
அத்துடன் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான பரிசோதனைக்கு அத்தியாவசியமான சிறு நீரக டயலிசிஸ் (Kidney Dialysis Machine) இயந்திரத்திற்காக சீன அரசாங்கம் நூற்று தொண்ணூற்று ஆறு இலட்சம் ரூபா பெருமதியான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
இது முழுக்க முழுக்க கடனாக இல்லாது நன்கொடையாகவே வழங்கப்பட்டது.
தமது நாட்டுப் பிரஜைகளுக்காக கடனுக்குப் பதிலாக நன்கொடைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையே சீனத்தூவரிடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
இதன்போது சீனத் தூதுவர் கீ.சென்ஹோங் கருத்துத் தெரிவிக்கையில்,
இத்திட்டத்தின் வெளிப்படைத் தன்மையால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் இதனாலயே குறித்த நன்கொடையை வழங்குகின்றோம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் 'ஜன சுவய' திட்டத்தின் கீழ் “சத்காரய” நிகழ்ச்சித் திட்டங்கள் இது வரை 34 கட்டங்கள் வரை இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த செயற்பாடுகள் முறையாகவும் உகந்ததாகவும் முன்னெடுக்கப்படுவதை தாம் அவதானித்துள்ளோம்.
சீன அரசாங்கம் இது தொடர்பில் அவதானம் செலுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி இந்த நன்கொடையை வழங்க தீர்மானித்திருந்தது.
இந்நாட்டு மக்களின் நலனுக்காகவும், சுகாதார மேம்பாட்டிற்காகவும் சீனா ஆற்றிவரும் இந்த பங்களிப்புக்கு இலங்கை சார்பில் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு சம்பிரதாய எதிர்க்கட்சியின் வகிபாகத்தில் இருந்து விலகி நாட்டிற்கு பெறுமானம் சேர்க்கும் இராஜதந்திர அர்ப்பணிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு எடுத்துக்காட்டு.
வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சியும் மேற்கொள்ளாத பல அபிவிருத்திப் பணிகளை அதிகாரம் இல்லாவிட்டாலும் தமது கட்சியால் முன்னெடுக்க முடிந்ததாகவும் இது அரசியலுக்கு பதிலாக தேசத்திற்கான சேவையையே தான் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





