விமானத்தில் பாதிரியாரிடம் கைவரிசையை காட்டிய சீன நாட்டவர் : எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
இலங்கை வந்த விமானத்தில் பாதிரியார் ஒருவரின் மருத்துவ சிகிச்சை பணத்தை திருடிய சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(11) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வந்த பணம்
அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 81 வயது அமெரிக்க கத்தோலிக்க பாதிரியார் ஒருவர், 4,000 அமெரிக்க டொலர்களை(12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ) இலங்கையில் வசிக்கும் தனது மூத்த சகோதரிக்கு மருத்துவ சிகிச்சைக்காக நன்கொடையாகக் கொண்டு வந்தார்.
இந்த விமானத்தில் பயணித்த 54 வயதான சீனப்பிரஜை குறித்த பணத்தை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்காவில் கைது
இந்த விமானத்தில் பயணித்த ஒரேயொரு சீன நாட்டவர் இவர் ஆவார்.விமானம் அபுதாபியிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சீன நாட்டவர் பாதிரியாரின் சூட்கேஸிலிருந்து பணத்தைத் திருடிச் சென்றார்.
இது குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த பின்னர், அவர்கள், கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, சீன நாட்டவரைக் கைது செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
