சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்
மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகை கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பண்டிகை கால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.
மன்னார் நகர சபையினால் கேள்வி கோரல் அடிப்படையில் சுமார் 350ற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.
உள்ளூர் மற்றும் தென் பகுதி வியாபாரிகள் இடத்தை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு
கடந்த 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பண்டிகை கால வியாபார நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன் தற்போது மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் மன்னார் நகர் பகுதிக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

கடந்த காலங்களை விட இம்முறை அதிகமாக, விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதேவேளை இம்முறை மன்னார் நகரசபைக்கு பண்டிகை கால வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மையினால் நான்கு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த நிதியானது 2026 ஆம் ஆண்டிற்கான மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு செலவிடப்படவுள்ளது.
செய்தி - ஜோசப் நயன்



வவுனியா
வவுனியாவில் கொட்டும் மழையிலும் நத்தார் பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளது.
உலகம் பூராவும் இயேசுவின் பிறந்தநாளை மக்கள் நத்தார் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை, மக்கள் கொள்வனவு செய்து செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதேவேளை வவுனியா மாநகரசபையினால் வீதியோர வியாபார நடவடிக்கையினை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்தி - கபில்
மலையகம்
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் 25.12.2025 அன்று மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 24.12.2015 அன்று ஹட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.
இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர்.
செய்தி - திருமாள்


கிழக்கு
இயற்கை அனர்த்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை வியாழக்கிழமை(25.12.2025 கொண்டாடப்பட உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டி வழிபாடுகளில் ஈடுபட உள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்துமஸ் நள்ளிரவு ஆராதனை புளியந்தீவு மரியாள் தேவாலயத்தில் மட்டு மறை மாவட்ட ஆயர் தலைமையில் இடம்பெற உள்ளது.
புதன்கிழமை(24.12.2025) மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான கிறிஸ்தவ மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைவாக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |