ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் - புலனாய்வு அதிகாரிகள் மீது சந்தேகம்? சிஐடியில் முறைப்பாடு
நூற்றுக்கும் மேற்பட்டவர்களை உயிர்களை பலியெடுத்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகங்கள் உட்பட வெகுஜன ஊடகங்கள் வெளியிட்டுள்ள அண்மைய தகவல்கள் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி சட்டத்தரணிகள் அமைப்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் வெளியாகியுள்ள தகவல்கள் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக, மக்கள் சட்டத்தரணிகள் சங்கம், குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரிடம் செய்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக ஒரு தேசிய பத்திரிகை மற்றும் ஒரு இணையத்தளம் வெளியிட்ட தகவல்களையும் சட்டத்தரணிகள் குழு குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரிடம் சமர்பித்துள்ளது.
”நல்லிணக்கம் ஒழிக்கப்பட்டு உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி வெளிப்படுகிறார். இரண்டு இஸ்லாமிய அமைப்புகளை பதிவு செய்ய இராணுவ அதிகாரி முயற்சி” என்ற தலைப்பில் திவயின பத்திரிகையின் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி இ-பேப்பரில் கீர்த்தி வர்ணகுலசூரிய என்பவரால் எழுதப்பட்ட பத்தியில், அந்த தாக்குதலின் சூத்திரதாரி மற்றும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரி தொடர்பாகவும், திருகோணமலை கின்னியா இல. 42 யு.சி வீதியில் அமைந்துள்ள அல் ஹிக்மா அறக்கட்டளை மற்றும் கொள்ளுப்பிட்டி காலி வீதி, இல.101இல் சராஸ் அறக்கட்டளை ஆகிய இரண்டு இஸ்லாமிய அமைப்புகளை பதிவு செய்வது குறித்தும் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் தொடர்பிலும் குறித்த பத்தியில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் புலனாய்வுப் பிரிவு அதிகாரித் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
புலனாய்வு அதிகாரியை கைது செய்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் விசாரணைக்கு அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு இராணுவ குழு வந்து அவரை "இது இராணுவ திட்டம்" என தெரிவித்து அவரை மீண்டும் அழைத்துச் சென்றதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அல் ஹிக்மா மற்றும் சஹரா அறக்கட்டளை ஆகிய அமைப்புகளை பதிவு செய்வதற்காக, அரச சார்பற்ற அமைப்புகளை பதிவு செய்யும் அலுவலகத்திற்கு, இராணுவ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய ஜனித அம்பகல என்ற முன்னாள் அதிகாரி வருகைத்தந்த விடயம் பிரதீப் ஏகநாயக்க என்ற நபரின் பேஸ்புக் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி மற்றும் பேராயருக்கு தெரிவிக்கும் வகையில் கடந்த முதலாம் திகதி அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக, மக்கள் சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தில் விரிவுரையாளரைாக பணியாற்றும், குறித்த நபரின் மனைவியான, சாரா சில்வா அல்லது சாரா அம்பகல மற்றும் அவரது குடும்பத்திற்கு இந்த விடயத்தில் தொடர்புகள் காணப்படுவதாக அந்த அமைப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்துள்ளது.
"தாக்குதலுக்கான அனைத்து திட்டங்களும் இராணுவ புலனாய்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட என்பதற்கு இது வலுவான சான்று என அந்த பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.”
"அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் சலேயின் நோக்கத்திற்காக கிழக்கிலிருந்து 50 முஸ்லீம் இளைஞர்களை இணைத்துக்கொண்டு மற்றொரு தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது” என ”2ஆவது வெளிப்பாடு” என்ற தலைப்பில் ”லங்கா தவச” என்ற இணையதளத்தில் மே 3ஆம் திகதி பல விடயங்கள் வெளியிடப்பட்டிருந்ததாக மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் துவான் சலே தொடர்பிலேயே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து காரணிகளையும் கவனத்தில் கொண்டு, ஒரு விரிவான விசாரணையை நடத்துமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன் ஊடாக பொறுப்பக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சேனக பெரேரா, சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்திரசேன, சட்டத்தரணி உபாலி ரத்நாயக்க, சட்டத்தரணி தம்பையா ஜெயரட்னராஜா, சட்டத்தரணி நாமல் ராஜபக்ச மற்றும் சட்டத்தரணி அருணி தனபாலஆராச்சி ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பின்னர் சட்டத்தரணி சேனக பெரேரா ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.