மட்டக்களப்பில் இருதரப்பினரிடையே உச்சக்கட்ட மோதல் : கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி
மட்டக்களப்பில் (Batticaloa) மரக்கறி வியாபரிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய வர்த்தகரான டிலக்ஷன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வர்த்தக போட்டி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு அரசடி பகுதிக்கும் கல்லடி பாலத்துக்கும் இடையிலுள்ள வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனங்களில் மரக்கறிகளை கொண்டு வந்து வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவது வழமையாகவுள்ளது.
இந்தநிலையில் சம்பவதினமான நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரரான வியாபாரி தனது பட்டா ரக வாகனததை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வாகனத்துக்கு அருகாமையில் இன்னொரு வர்த்தகர் தனது வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே வர்த்தக போட்டி காரணமாக வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
ஆயுதங்களால் தாக்குதல்
இதனையடுத்து, சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் உயிரிழந்த அண்ணாவுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து வரவழைத்துள்ளார்.
அவர் அங்குவந்து சகோதரனுடன் வாய்தர்கத்தில் ஈடுபட்ட வர்த்தகர் மீது தாக்குல் மேற்கொண்டதையடுத்து அங்கு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் பின் அவர் மீது நான்கு பேர் கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணை
பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வர்தகர்களும் காவல்துறையினரிடம் சரணடைந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
