குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் குறித்து வெளியான தகவல்
நாட்டிலுள்ள 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ (Nalaka Kaluwewa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு பாடசாலையின் சூழ்நிலைகளின் அடிப்படையில் தேவையான முடிவுகள் எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள பாடசாலைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு திட்டம் ஏற்கனவே நடந்து வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட பாடசாலைகளைப் பராமரிக்கும் போது மட்டுமே மூடுவதற்கான பரிசீலனை மேற்கொள்ளப்படுமென அவர் மெலும் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் அதிக பாடசாலைகள்
நாடு முழுவதும் உள்ள 10,194 பாடசாலைகளில் மொத்தம் 1,486 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயில்வதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
வட மாகாணத்தில் இதுபோன்ற பாடசாலைகள் அதிகமாக இருப்பதாகவும் அந்த வகையில் 275 பாசாலைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்
அதைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 240 பாடசாலைகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 230, ஊவா மாகாணத்தலி 158 பாடசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் 141பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 133 பாடசாலைகளும், தென் மாகாணத்தில் 125 பாடசாலைகளும் , வடமத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும் மேல் மாகாணத்தில் 73 பாடசாலைகளும் உள்ளன.
வகுப்பறைகளில் நெரிசல்
குறைந்த மாணவர் அனுமதி உள்ள பாடசாலைகளை மூடிவிட்டு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கை அதிபர்கள் சங்கம் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாற்றுவது நகர்ப்புற வகுப்பறைகளில் நெரிசலை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
