CM விஜய்க்கு இன்று சட்டசபையில் பலப்பரீட்சை - உற்று நோக்கும் இந்தியா
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று சட்டமன்றத்தில் எதிர்கொள்கிறது.
அரசு மீதான நம்பிக்கை கோரும் வக்கெடுப்பு இன்று (மே 13) காலை 9.30 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது
திமுக, ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு செல்லாமல் புறக்கணிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனிப்பெருங்கட்சி
தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது.

இதையடுத்து பெரும்பான்மைக்கான இடங்களைப் பெறுவதற்காக தவெக, பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. அந்த வகையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கின.
இதைத் தொடர்ந்து 120 எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியதால் அழைப்பு விடுத்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர், சட்டசபையில் மே 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
தற்போதுள்ள நிலையில் விஜய்க்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இதனால், விஜய் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை காட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக அரசு சுலபமாக வெற்றி
இந்தநிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க் கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியானது இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.
அதேபோல் திமுகவும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் இன்றைய கூட்டத்தொடருக்கு செல்லாமல் புறக்கணிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு கட்சி எம்.எல்.ஏக்களும் புறக்கணித்தாலும் தவெக அரசு சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்பதால், இன்று சட்டப்பேரவையில் யார் யாரெல்லாம் ஆதரவு அளிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |