வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகள் - அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள தீர்மானம்
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாக சிலரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குறித்த விசாரணைகள் சில விடயங்களை எனக்கு உணர்த்தியுள்ளது. உரிய அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாது, இலங்கை கடல் பரப்பில் தன்னிச்சையாக அமைக்கப்பட்டுள்ள பட்டி வலைகள், கடலட்டைப் பண்ணைகள் போன்ற அனைத்தும் அகற்றப்பட்டு, அனைத்து தொழில் செயற்பாடுகளையும் உரிய நியமங்களுக்கு அமைய ஒழுங்குபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கடலட்டைப் பண்ணை அனுமதி
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 400 கடலட்டைப் பண்ணைகள் இருக்கின்ற போதிலும், இரண்டு பண்ணைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக நக்டா அதிகாரி தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“குறித்த செய்தி தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரியுடன் கலந்துரையாடியதாகவும், முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட கிராஞ்சி பகுதியில் எத்தனை பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது? - என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாகவே இரண்டு பண்ணைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக பதில் அளித்ததாகவும், கிளிநொச்சி மாவட்டம் தொடர்பாக எந்தவிதமான கேள்விகளும் கேட்கப்படவில்லை என்பதை, குறித்த அதிகாரி தனக்கு தெளிவுபடுத்தியதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசாரணை செயற்பாட்டை சரியாக கிரகிக்காத சிலரினால் பொறுப்பற்ற முறையில் தவறான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகவே தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.