பாதாள உலக முக்கிய புள்ளி தொடர்பில் சிக்கியது ஆதாரம்!
பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட அதி சொகுசு மகிழுந்து உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பனவற்றை கல்முனை தலைமையக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த சந்தேக நபர் பின்னர் இந்தியாவிற்கு தப்பி செல்லும் வேளை விமான நிலையத்தில் வைத்து கைதானார்.
அச்சந்தேக நபர் வழங்கிய தகவல் ஒன்றிற்கமைய பொத்துவில் பகுதியில் கல்முனை தலைமையக காவல்நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தேடுதலில் இன்று குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பாதாள உலக முக்கிய புள்ளி
இதன் போது கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது 3 ஆவது மனைவி என கூறப்படும் பெண்ணின் வீட்டில் இருந்தே மறைத்து வைக்கப்பட்டிருந்த பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட அதி சொகுசு மகிழுந்து உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பனவற்றை காவல்துறை மோப்பநாய் உதவியுடன் கல்முனை தலைமையக காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட மகிழுந்து, பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகாக்கள் பயணித்த நிலையில் வேறு ஒரு குழுவினரால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு தப்பி சென்று பொத்துவில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அத்துடன் வெளிமாவட்டத்தில் ஏதாவது குற்றச்செயலுக்கு பாவிக்கப்பட்டு குறித்த மகிழுந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் மூவரும் வெள்ளிக்கிழமை (23) அன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தலைமைமறைவு
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபர்களில் ஏற்கனவே சம்பவ தினதன்று 2 பேரும், மற்றுமொருவர் விமான நிலையத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டிருந்தனர். மற்றுமொரு சந்தேக நபர் தொடர்ந்தும் தலை மறைவாகவே இருந்து வருகின்றார். அச்சந்தேக நபரை தொடர்ச்சியாக காவல்துறையினர் தேடி வருகின்றார்கள்.
இச்சந்தேக நபர் தனியார் காப்புறுதி அலுவலகம் ஒன்றில் பணியாற்றுவதாக கூறி வாகனங்களை வாடகைக்கு விட்டு வந்துள்ளதுடன் இவ்வாறான போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்டுள்ள மகிழுந்தின் பெறுமதி சுமார் ஒன்றரைக் கோடி ரூபா மதிக்கத்தக்கதாகவும் மகிழுந்து தற்போது கல்முனை தலைமையக காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
விசாரணை
அந்த மகிழுந்து சம காலத்தில் பல நபர்களின் பெயரில் பதியப்பட்டுள்ள விடயம் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் குறித்த மகிழுந்து வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதா என்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதே வேளை அடையாளம் காணப்பட்ட மகிழுந்தின் உரிமையாளரை கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதேவேளை காரின் கதவுகளை திறந்து காவல்துறையினர் சோதனையிட்டதில் சில சான்று பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
