கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு - சபையில் அம்பலப்படுத்திய எம்பி
புதிய இணைப்பு
கொட்டாஞ்சேனை (Kotahena) மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய போதே கொழும்பு (Colombo) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை வெளிப்படுத்தியுள்ளார்
குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டபோதே, முஜிபுர் ரஹ்மான், இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை என்று சாடினார்.
நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுமா என்றும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல எனவும் கூறினார்.
முதலாம் இணைப்பு
கொழும்பில் (Colombo) உள்ள பிரபல பாடசாலையின் மாணவி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிலையில், உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
குறித்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரிடம் அது குறித்த விபரிப்புக்களை பெறவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
அத்துடன் இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி இன்று (08) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாணவிக்கு நீதி கோரி போராட்டம்
அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது.
உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
