ஒதுக்கப்படும் பணத்திற்கேற்ப அபிவிருத்தித் திட்டங்களை முன்னகர்த்துங்கள் - பிரசன்ன ரணதுங்க
“எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் போதும், ஒதுக்கப்படும் பணத்திற்கேற்ப அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்“ என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று(13) இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு.டபிள்யு.எஸ்.சத்யானந்தா, அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திட்ட அறிக்கைகள்

இதேவேளை அடுத்த வருடம் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளைத் தயாரித்து இப்போதே கேள்விப்பத்திரங்களைக் கோரத் தொடங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
பணம் கிடைத்தவுடன் உரிய வேலைத்திட்டங்களை தாமதமின்றி ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிதியமைச்சகத்துடன் கலந்துரையாடி, தேவைப்பட்டால் அமைச்சரவையில் முன்வைக்க அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க செயலாளருக்கு மேலும் பணிப்புரை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள்

''புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் போது அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் கலந்துரையாடி அதற்கான வேலை ஒழுங்கமைப்புகள் தயாரிக்கப்பட வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆளுங்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பதால், அது தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் விமர்சனங்கள் இன்றி சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பல நிறுவனங்கள் உள்ளன, அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தும் போது அதற்குத் தேவையான அடிப்படைப் பணிகளை அமைச்சின் கீழ் இயங்கும் அந்த நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும். இதனால் வெளி நிறுவனங்களுக்கு இழுக்கப்படும் பெருமளவிலான பணத்தை அமைச்சுக்குள்ளேயே வைத்திருக்க முடியும்.
சாத்தியக்கூறுகளை ஆராய்தல்

குறைந்த பணத்தில் பெரிய அளவிலான திட்டங்களைத் தொடங்கினால், பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பணம் விரயமாவது மாத்திரமன்றி பொதுமக்களும் அரசாங்கமும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, அறிவுரைகள் வழங்கிய பிறகும், உரிய ஆய்வு செய்யாமல், அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்க வேண்டாம். '' என்றவாறு தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கம் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, அரசாங்கத்திற்கு சுமை ஏற்படாத வகையில் அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.