'ஈகைப்பேரொளி முருதாசனின்' 13ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு ( படங்கள்)
ஜ.நா மனித உரிமை முன்றலில் கடந்த 2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழருக்கு நீதி கோரி தீக்குளித்து மரணமடைந்த ஈகைப்பேரொளி முருகதாசனின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் நினைவு கூரப்பட்டது.
நினைவு தின நிகழ்வுகள் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகளது நினைவுக் கல்லறையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் பொதுச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசனின் சகோதரர் வர்ணகுலசிங்கம் சுதன் ஏற்றிவைத்தார். ஈகியர் கல்லறைக்கான மலர் மாலையினை அவரது தாயாரும் சகோதரியும் அணிவித்தனர்.
அகவணக்கத்தை தொடர்ந்து எதிர்காலத் தலைமுறைச் சிட்டுகளால் மலர்வணக்கம் தொடங்கப்பட்டு அங்கு வருகைதந்திருந்த மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு நீதிராசா சிறப்புரை ஆற்றியிருந்தார். நினைவுரையினை உலகத் தமிழர் வரலாற்று மைய தோற்றுவிப்பாளர் அவையைச் சேர்ந்த திரு.சுரேஸ் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்விற்கு தலைமைதாங்கிய திரு.புலவர் அவர்களின் உறுதியுரையுடன் ஈகைப்பேரொளி முருதாசன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது.
ஈகைப்பேரொளி முருதாசன், பேரினவாத அரசின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது “சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்துக் குரல்கொடுத்தவாறு தீயிற்கே தன்னுடலை இரையாக்கியிருந்தார்.
7 பக்கங்களில் “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனத்தை எழுதி வைத்து விட்டு ஜெனீவா மனித உரிமை முன்றலில் 2009 பெப்ரவரி 12ஆம் திகதி அன்று இரவு முருகதாசன் தீக்குளித்து மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.