சபாநாயகருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பதிவான முறைப்பாடு!
அரசு சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டாரவினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
அதன்போது, சபாநாயகர் பதினைந்து பேர் கொண்ட ஊழியர்களை தனது பணிக்காகப் பயன்படுத்தியதாகவும் சபாநாயகர் தனது இரண்டு அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கு கூடுதலாக மற்றொரு வாகனத்தை வாங்கியுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு, மேலதிகமாக பெறப்பட்ட வாகனமானது, அவரது தனிப்பட்ட செயலாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகீஸ்வர பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் அனுமதியுடன் சபாநாயகர் தனது உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு 900 லிட்டர் எரிபொருளைப் பெறுவார் என்று கூறிய பண்டார, சபாநாயகருக்கு ஒரு உத்தியோகபூர்வ வீடு இருந்தாலும், கொழும்பில் உள்ள லோரிஸ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மற்றொரு அதிகாரப்பூர்வ வீடு வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தரப்பில் இருந்து பதில்
மேலும், சபாநாயகர் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வீட்டை பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியிருந்தாலும், அது சிறப்பு நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் சுகீஸ்வர பண்டார கூறியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சபநாயகரின் ஊடகப் பிரிவு, அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாகவும், எதிர்காலத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முழுமையான விளக்கத்தை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
