மக்கள் போராட்டங்களின் பின்னணியில் சதித்திட்டம் - ஆளும்கட்சி குற்றச்சாட்டு
மக்கள் போராட்டங்களின் பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிரான சதி
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களின் பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிரான சதியே இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது.
இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாதவாறு நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மூன்றில் ஒரு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், மக்களின் போராட்டம் என்பது போராட்டம் அல்ல எனவும் அதுவொரு கலவரம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் சிலர்

இந்தப் போராட்டத்தின் விளைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சில கட்சி உறுப்பினர்கள் தனியான குழுவொன்றை உருவாக்கிய போதிலும் கட்சி பிளவுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று அறியாதவர்களாகவோ அல்லது தவறாக வழிநடத்தப்பட்டவர்களாகவோ இருப்பார்கள். அதே வேளையில் ஒரு சிலர் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கட்சி முன்னோக்கி செல்லும் அதே வேளையில் நிகழ்ச்சி நிரல்களை கொண்ட நபர்கள் நீக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.